திங்கள், 31 அக்டோபர், 2011

விவசாயம்

விவசாயம் அழிந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.., இன்னும் சில ஆண்டுகளில் விவசாய நிலங்களை  பார்ப்பதே அரிதாகி விடும் நிலை இருக்கிறது.

கிராமத்திற்கு சென்ற போது சுற்றிலும் பசுமையான விளைநிலங்கள் ...ஆனால் அதற்க்கு நடுவே ஒரு விளைநிலம் வீடு மனைகளாக மாறி இருந்தது.

விவசாயம் கைவிட படுவதற்கும் , விவசாய நிலங்கள் வீடுமனைகளாக மாறுவதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது வந்த புலம்பல்கள்..

1.அனைவரும் கெளரவம் பார்க்கின்றனர். அதாவது விவசாயம் பார்ர்ப்பது என்பது கௌரவ குறைச்சலாக மாறி விட்டது. எந்த ஒரு விவசாயியும் தனது மகனை/ மகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புவது இல்லை. பொறியியல் படிக்கவே அனுப்புகிறார்கள். விவசாயிகள் இப்படி என்றால் மற்ற துறையை சார்ந்தவர்கள் சத்தியமாக தனது குழந்தைகளை விவசாயம் செய்வதை அனுமதிக்க மாட்டார்கள். 

 இதற்க்கு இவர்களை குற்றம் சொல்வது நியாயம் இல்லை.. இவர்களை பார்த்து நம்மை போன்றவர்கள் கொடுக்கும் மரியாதையும் , பார்க்கும் பார்வையும் அப்படிதான் இருக்கிறது. ஒரு கடைக்கு போனால் கூட இவர்களை கடைக்காரன் ஏளனமாகத்தான் பார்க்கிறான். இதனால் தாங்களும் தங்களது வாழ்க்கை தரத்தை வேறு விதமாக மாற்றி கொள்ள முனைகிறார்கள் .. அதில் தவறு சொல்ல நமக்கு எந்த அருகதையும் இல்லை.

2.விவசாயம் செய்ய கூலிக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. அனைவருக்கும் எல்லாம் இலவசம்.. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் ( இந்த அரசு திட்டத்தில் பத்து ஆயிரம் ருபாய்  வரை கொடுத்து எதாவது ஒரு அரசு வேலை .. புறம்போக்கு நிலங்களை  பராமரிப்பது, சாலை பராமரிப்பு போன்ற வேலை கொடுத்து விடுகிறார்கள்.. இதற்க்கு வேலை செய்ய தேவை இல்லை கையெழுத்து போட்டு விட்டு வந்து விட்டால் போதும் என்ற நிலை இருக்கிறது... இதை தற்போது இருநூறு நாள் வேலை வாய்ப்பு திட்டமாக மாற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ) என்று வறுமை கோட்டு மனிதர்களையும் சோம்பேறி ஆக்கி விட்டது அரசு. நூறு ரூபாய்  கொடுத்து செய்யும் வேலைக்கு தற்போது 300   ரூபாய் கொடுத்தாலும் யாரும் வருவதாக இல்லை.



3.என்னதான் வெய்யிலிலும். மழையிலும், அதிகாலை 3  மணிக்கு எழுந்து இரவு 9 மணி வரை உட்காராமல் உடலை வருத்தி வேலை செய்தாலும் அவர்களது உழைப்பிற்கு ஏற்ற கூலி கிடைப்பதில்லை . ஒரு ருபாய்க்கு அவர்கள் விற்கும் பொருள்  வீடுகளுக்கு வரும்போது ஐந்து ரூபாயாக வருகிறது. ஆனால்  இவர்கள் சம்பாதிப்பதோ ஐம்பது  பைசா மட்டுமே.. இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்து பணம் செய்பவர்கள் ஏக போகமாக இருகிறார்கள். ஆனால்  இவர்கள் இன்னும் மற்றவர்கள் முன் கை கட்டி நிற்கிறார்கள் . 

கண்டிப்பாக வெகு விரைவில் அழிந்து கொண்டு இருக்கும் விவசாயத்தால் .. மீண்டும்  வேளாண்மை தொழிலுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும்  மாற்றம் என்பது மாறாதது என்று சொல்வார்கள்.. அது போல் தற்போது software மாப்பிள்ளை வேண்டும் என்று தேடுபவர்கள் நாளை திருமண சந்தையில் விவசாய மாப்பிள்ளை வேண்டும், விவசாய நிலம் இருக்கிறதா என்று கேள்வி கேட்க்கும் நாள் திரும்பவும் கண்டிப்பாக வரும் . 

அடுத்த பத்து  அல்லது பதினைந்து  ஆணடுகளில்  அவரவது வீட்டிற்கு அவர் அவர்களே சிறு நிலத்தை வைத்து பயிரிட்டு அறுவடை செய்து சாப்பிடும் காலம் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை . அல்லது அரசு பெரும்பான்மையான நிலங்களை எடுத்து விவசாயம் செய்ய சொல்லி அதில் வேலை செய்பவர்களுக்கு அரசு ஊதியம் ( அரசு ஊழியராக நியமித்து ) கொடுத்தாலும் ஆச்சர்ய படுவதிற்கில்லை.  

  

கருத்துகள் இல்லை: